கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் பிரகாஷ். இவர், தனது சொந்த தேவைக்காக ரூ.45 ஆயிரம் பணத்தை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளார்.
அப்போது, உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில பொருட்களை வாங்கிவிட்டு மீதி பணத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபோது பணத்தைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பணத்தைத் தவறவிட்டது கண்டு பதறிப்போன பிரகாஷ், உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகத்திடம் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம், உடனடியாக பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி ஒருமணி நேரத்தில் பிரகாஷ் தவறவிட்ட 45,000 ரூபாய் பணத்தை மீட்டு அவரிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டரின் உடனடி நடவடிக்கையைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.