Skip to main content

குற்றால நாதர் கோயில் கட்டடக் கலையைக் கண்டு வியந்த மாணவியர்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Students marveled at the architecture of the kutralanathar Temple

 

மரபு நடைப் பயணத்தில் குற்றாலநாதர் கோயில் கட்டடக் கலை சிறப்பைக் கண்டு கல்லூரி மாணவியர் வியந்தனர்.

 

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி மற்றும் கோயில் கட்டடக் கலை சிறப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெய்நிலா சுந்தரி தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் அமிர்தவல்லி அனைவரையும் வரவேற்றார். முதல் நாள் நிகழ்வில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ் எழுத்து  கி.மு 6-ம் நூற்றாண்டிலிருந்து எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை மதுரை யானை மலை, விக்கிரமங்கலம், அழகர்மலை உள்ளிட்ட மலைக் குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி எழுத்துகள், கோயில் கல்வெட்டுகள் ஆகியவற்றின் படங்கள் மூலம் தமிழி மற்றும் தமிழ் எழுத்துகளை எழுதவும் கல்வெட்டுகளைப் படிக்கவும் பயிற்சியளித்தார். 

 

இரண்டாம் நாள் நிகழ்வில் பழந்தமிழர்களின் கட்டடக்கலை மரபு புதிய கற்காலம், பெருங்கற்காலத்தில் தொடங்கி கோயில்களாக வளர்ந்து வந்த விதம், ஆறு அங்கங்களுடன் அமையும் கோயில் விமானம், அதன் உறுப்புகள், தளங்களின் அமைப்பு, இஸ்லாமிய, கிறித்துவ, ஜைன மத கட்டடக்கலை ஆகியவற்றை படங்கள் மூலம் விளக்கினார். பின்பு கல்லூரியிலிருந்து மரபுநடைப் பயணமாக குற்றாலநாதர் கோயில் சித்திரசபைக்கு மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கோயில் கட்டடக்கலை அமைப்பு பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு விளக்கமளித்தார். பின்னர் கல்வெட்டுகளை படி எடுக்கும் வழிமுறைகளை செயல் விளக்கமாக செய்து காட்டினார். இக்கோயிலில் உள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டை மாணவியர் படி எடுத்து படித்து அறிந்து கொண்டனர். இக்கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலையைக் கண்டு வியந்ததாகவும், கல்வெட்டுகளை படித்து அறிய இப்பயிலரங்கம் உதவியதாகவும், இனி எந்தக் கோயிலுக்குப் போனாலும் இறை வழிபாட்டுடன் அதன் கட்டடக்கலையையும், கல்வெட்டுகளையும் நாங்கள் பார்த்து படித்து வருவோம் எனவும் மாணவியர் தெரிவித்தனர்.

 

பயிலரங்கை கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அமிர்தவல்லி, வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் முனைவர் கற்பகசெல்வி, முனைவர் ரேணுகாதேவி, வெங்கடேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இளங்கலை மற்றும் முதுகலை வரலாற்றுத்துறை மாணவியர் 210 பேர் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். வரலாற்றுக் கழகச் செயலர் மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்