
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளி மாணவன் ஒருவர் மர்மமான முறையில் கழிவறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உறவினர்களும் பெற்றோர்களும் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள எல்ஐசி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் கவின்ராஜ். புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் சென்ற சிறுவன் கவின்ராஜ் கழிவறைக்கு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக பள்ளி மாணவர்கள் ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்க ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனை முன்பு சாலையில் குவிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்த முயன்ற நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.