
ஈரோடு மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் நேற்று (22.06.2021) ஈரோடு கால்நடை மருத்துவமனை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். கொள்கை பரப்புச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் தேசிங்கு, மாநகர துணைச் செயலாளர் கவுதம், மாநகரச் செயலாளர் ருத்ரன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் கிடைக்க வலியுறுத்தியதோடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவ கொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்ற கூறியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.