Skip to main content

கரும்புக்கு விலை நிர்ணயித்திட  வருவாய் பங்கீட்டு முறை அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற கோரிக்கை

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

 

sugar


கரும்புக்கு விலை நிர்ணயித்திட  வருவாய் பங்கீட்டு முறை அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்த அறிக்கை:

’’இனி மேல் மாநில அரசு, கரும்புக்கு பரிந்துரை விலையை (State Advised Price) அறிவிக்காது. டாக்டர்.சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைபடி வருவாய் பங்கீட்டு முறையில் கரும்புக்கு விலையை தீர்மானித்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சர்க்கரை ஆலை முதலாளிகள் வலியுறுத்தி வந்த கோட்பாடாகும். ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரை, பக்காஸ், மொலாசஸ் இவற்றை விற்று வரும் வருவாயில் 70 சதவீதத்தை கரும்புக்கு விலையாக தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் கரும்பு பிழிதிறன் 9 சதவீதம் அளவில் இருப்பதனால் வருவாய் பங்கீட்டு முறையில் விலை நிர்ணயம் செய்திடும் போது, ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயத்திடும் விலையை விடவும் குறைவாகவே விலை கிடைக்கும்.

 

உற்பத்தி செலவு அதிகாரித்துள்ள நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பங்கீட்டு முறை பலனளிக்காது. தமிழ்நாட்டில் 2012ல் 21 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2016-17ல் 9.5 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. வருவாய் பங்கீட்டு முறையை அமுல்படுத்தினால் கரும்பை விட்டு மாற்று பயிர்களுக்கு விவசாயிகள் சென்றுவிடும் நிலையே ஏற்படும்.

 

நாடுமுழுவதும் விவசாயிகள் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதம் லாபம் வரும் வகையில் விலை நிர்ணயம் செய்திட எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமுலாக்கிட வேண்டுமென்று வலுவாக போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக வருவாய் பங்கீட்டு முறையை அமுல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பானது. மேலும், தனியார் ஆலைகள் தர வேண்டிய நான்கு ஆண்டுகால பாக்கி ரூ.1350 கோடியை பெற்றுத்தருவது குறித்தும், கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய ரூ.215 கோடி பாக்கி குறிததும் அமைச்சர் எதுவும் கூறாதது வேதனையளிக்கிறது. எனவே, தமிழகத்தில் லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வருவாய் பங்கீட்டு முறைப்படி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

 

அரசின் இந்த முடிவை திரும்பப் பெறுகிற வரை கரும்பு விவசாயிகளை அணிதிரட்டி தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும். ரூ.1600 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கியை பெற்றுத்தர உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று மாநில அரசை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வேலை நிறுத்தம்; வருவாய்த்துறை அலுவலகத்தில் தேங்கிய பணிகள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Office work has also been completely disrupted due to struggle by revenue dept officials.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் மொத்தம் 14 ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  முதல்கட்டமாக கடந்த பிப்.13ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டாம் கட்ட போராட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஊழியர்கள் நேற்று(26.2.2024) வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று (27.2.2024) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மொத்தம் 400 ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் வாயிலாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை நிர்யணம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக தெளிவுரை வழங்கிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இன்று முதல் தொடங்கிய காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, விதவை உள்ளிட்ட அனைத்து வகையான சான்றுகள் வழங்கும் பணிகளும், தேர்தல் மற்றும் அலுவலகப் பணிகளும் முற்றிலும் தடைபட்டுள்ளது.