
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உற்சவங்கள், பூஜைகள் நடத்துவதற்கு குழு அமைக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கோவில்கள் மூடப்பட்டன. தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோவில்கள், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க, குழு அமைக்கக்கோரி, சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் கோவில் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள போதும், பூஜைகள், உற்சவங்கள், சடங்குகள் நடத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
மேலும், கோவிலின் மதம் சார்ந்த விவகாரங்களில் அறநிலையத துறை ஆணையரும், கோவில் இணை ஆணையரும் தலையிடுவதற்கு தடை விதிக்க, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க அறநிலையத் துறைக்கும், கோவில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.