Skip to main content

'படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு'-மீட்கக் கோரும் தமிழக மீனவர்கள்

Published on 22/02/2025 | Edited on 22/02/2025
 'Sri Lankan government will auction boats' - Tamil Nadu fishermen demand rescue

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 20/02/2025 அன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த முறையும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை இரண்டாவது முறையாக ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 67 படகுகளின் பட்டியலை இலங்கை நீரியல் வளத்துறை வெளியிட்டு ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கையிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்