
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஏரியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீன் பிடிக்க வலை கட்டியிருந்தனர். அந்த வலையில் மீன்கள் சிக்கியுள்ளதா என்பதை பார்க்க வலையை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்ததைக் கண்டு அச்சம் அடைந்தனர்.
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு தப்பிக்க வழியின்றி, வலை நரம்புகளுடன் பின்னியிருந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாணாவரம் வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று வலையை அறுத்து, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அந்த மலைப்பாம்பை அங்கிருந்து வனத்துறையினர் கொண்டு சென்றனர். பின்னர் அந்த மலைப்பாம்பு பாணாவரம் காப்புக்காட்டில் விடப்பட்டது. மீன் பிடிப்பதற்காக கட்டப்பட்ட வலையில் மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.