
அரசு மருத்துவமனையில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் இலங்கை தமிழ் அகதி மாணவி ஒருவரை, அதே மருத்துவமனையிலேயே வைத்து பாலியல் வல்லுறவு நிகழ்த்திய டீக்கடை மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளது இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமை சேர்ந்த இலங்கை தமிழ் அகதி நிரஞ்சன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவருக்கு சமீபத்தில், டிசம்பர் 26 அன்று நடந்த சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தங்கி சிசிச்சை பெற்று வந்தார். இவருக்கு உதவியாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவரது மகள் அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) உடனிருந்து டீ, சிற்றுண்டி உள்ளிட்டவைகளை வாங்கி வந்து கவனித்துக்கொண்டார்.
இதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எதிரிலிருந்த டீக்கடைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்ததால், அங்கு டீ மாஸ்டராகப் பணியாற்றிய பெரியபட்டணம் முத்துச்சாமி மகன் சரவணன் (20) சிறுமி மீது மோகம் ஏற்பட, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, கையில் பன் வாங்கிக் கொடுத்து மருத்துவமனையிலுள்ள கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அவன். சிறுமியின் அலறல் சப்தம் மருத்துவமனை முழுவதும் எதிரொலிக்க, தப்பி ஓடியிருக்கின்றான் டீ மாஸ்டர் சரவணன். நடந்த நிகழ்வுகளை விசாரித்துத் தெரிந்த மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரவணனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர். இதனால் மண்டபம் முகாம் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.