
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை அடுத்துள்ள அஸ்தினாபுரம்-ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த லக்ஷ்மிஸ்ரீ என்ற மாணவி இன்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சக மாணவியுடன் சாலையோரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 52H என்ற மாநகர பேருந்து பேருந்து திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவி லட்சுமிஸ்ரீ உயிரிழந்தார்.
உடன் வந்த மாணவிக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்த போலீசார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.