Skip to main content

விஞ்ஞான ஊழலில்  பள்ளிக்கல்வித்துறை! தரமற்ற பொருள்கள் சப்ளை; பல கோடி ரூபாய் நூதன கொள்ளை!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப்பெட்டி, கதைப்புத்தகங்கள் மூலம், ஆளும் அதிமுக அரசு விஞ்ஞான ரீதியில் பல கோடி ரூபாயை சுருட்டியுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

 

b

 

தமிழகம் முழுவதும் 35177 அரசு தொடக்கப்பள்ளிகளும், 9750 நடுநிலைப்பள்ளிகளும், 5602 உயர்நிலைப்பள்ளிகளும், 6299 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 56828 பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு 2018-2019ம் ஆண்டிற்கு 28757 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலமே ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் குழந்தைகளுக்கான பதினான்கு வகையான விலையில்லா பொருள்கள், பள்ளி பராமரிப்பு ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.

 

b


ஆனால், மாணவர்கள் நலன் என்ற பெயரில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பல உபகரணங்கள் தரமற்று இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இரண்டு வகைகளில் விஞ்ஞான ரீதியில் ஓசையேயின்றி, பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் ஊழல்கள் அரங்கேறி வருவதாக கூறுகின்றனர். ஒன்று, பள்ளிகளுக்கு வழங்கப்படும் பொருள்களுக்கு சந்தை விலையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு விலை வைப்பது; இரண்டாவது, முற்றிலும் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்வது. இந்த இரண்டு வழிகளிலும் நூதன முறையில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

 

b

 

இதுபற்றி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.


''அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொள்வதற்காக எஸ்எஸ்ஏ (சமக்ர சிக்ஷா அபியான்) திட்டத்தின் மூலம் தொடக்கப்பள்ளிகளுக்கு தலா 4000 ரூபாய் வழங்கப்பட்டது. நடுநிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களுக்காக 6000 ரூபாயும், அத்துடன் முதலுதவிப் பெட்டிக்கு 2000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 8000 ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகை, அந்தந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு இருந்தது.

b


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப் பெட்டிகள் ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் வந்திறங்கியது. அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று அவற்றைப் பெற்றுக்கொண்டனர். அப்போது, எஸ்எஸ்ஏ திட்ட மேற்பார்வையாளர்களிடம் தலைமை ஆசிரியர்கள் 4000 மற்றும் 6000 ரூபாய்க்கான தொகையை காசோலையாக கொடுத்து, உபகரணங்களைப் பெற்றுக்கொண்டதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். 


நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணப் பெட்டியில் ரப்பர் டிஸ்கஸ்&1, ஸ்கிப்பிங் கயிறு&6, கிரிக்கெட் பேட்-2, டென்னிஸ் பந்து-6, கையுந்துப்பந்து-1, கையுந்துப்பந்து வலை-1, கைப்பந்து-2, கையெறி பந்து-1, ரக்பி பந்து-2, கூடைப்பந்து-1, கால்பந்து-2, ஃபிரீஸ்பீ (பறக்கும் தட்டு)-3, சாசர் கோன்-10, காலால் மிதித்து காற்றடிக்கும் பம்ப்-1, முதலுதவிப் பெட்டி-1, மார்க்கர் கோன்-9 ஆகிய உபகரணங்கள் இருந்தன.


இந்த உபகரணங்களை, சேலத்தைச் சேர்ந்த பராசக்தி எஜூகேஷனல் நீட்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் நிறுவனங்கள் இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஒப்பந்த உரிமையைப் பெற்று, பள்ளிகளுக்கு உபகரணங்களை விநியோகம் செய்துள்ளன.  

a


விளையாட்டு உபகரணங்களின் விலை விவரங்களை ஆன்லைன் நிறுவனங்களில் விசாரித்தபோது, மொத்தமே 5225 ரூபாய்தான் ஆகிறது. ஆனால், எஸ்எஸ்ஏ திட்டத்தில் இவற்றுக்காக ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிடம் இருந்தும் 8000 ரூபாய் பெறப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளிடம் 2000 பெறுமான உள்ள பொருள்களை கொடுத்துவிட்டு 4000 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளன. இப்படி தமிழ்நாடு முழுவதும் 3 ஆசிரியர்களுக்கு மேல் பணியாற்றும் 30000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கியதில் சத்தமே இல்லாமல் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.


முதலுதவிப் பெட்டியில் உள்ள பொருள்களின் மொத்த மதிப்பே 700 ரூபாய்க்கும் குறைவுதான். ஆனால், அதை 1300க்கு கொள்முதல் செய்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பட்ஜெட் கொண்ட திட்டங்களுக்கு வெளிப்படையாக டெண்டர் விட வேண்டும். ஆனால், தமிழக அரசு அந்தந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு வாய்மொழியாக ஒப்பந்தம் கொடுத்து, ஊழலை அரங்கேற்றியுள்ளது,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.


இது மட்டுமின்றி, அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு ஆசிரியர், மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக 'லெனோவா டேப் 7' பிராண்டு டேப்லெட் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அப்போது இதை, நவீன தொழில்நுட்பம் என தம்பட்டம் அடித்துக்கொண்டது. ஒவ்வொரு டேப்லெட்டையும் தலா 13500 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது. இதன் ஆன்லைன் விற்பனை விலை வெறும் 9899 ரூபாய்தான். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் தலா 3601 ரூபாய்களை சுரண்டி உண்டு கொழுத்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 


அதேபோல், நடுநிலைப்பள்ளிகளுக்கு சிறுவர் கதைப்புத்தகங்கள், நன்னெறிக் கதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், தலைவர்களின் வரலாறு என 106 தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஞானம் புக் ஏஜன்சி என்ற நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் பத்தாயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. 


ஞானம் புக் ஏஜன்சி வழங்கிய பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண் நந்தினி புக்ஸ் என்ற பெயரில் பதிவாகி இருந்தது. தொடர்ச்சியாக முயன்றும் யாரும் அழைப்பை எடுத்துப்பேசவே இல்லை. கூகுள் வரைபடத்திலும் சைதாப்பேட்டையில் ஞானம் புக் ஏஜன்சி என்ற பெயரில் நிறுவனம் இல்லாததும் தெரிய வந்தது.  


பல ஆண்டுகளாக பள்ளிகளுக்கு சிறுவர் கதைப்புத்தகங்களை விநியோகம் செய்து வந்த நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் சேலம் கிளை மேலாளர் கணேசன், 'இப்போது எல்லாமே காசுதான். ஆளுங்கட்சியினருக்கு யார் அதிக கமிஷன் கொடுக்கிறார்களோ அவர்களுக்குதான் புத்தக ஆர்டர் வழங்குகின்றனர். கமிஷன் கொ டுத்து ஆர்டர்கள் பெறுவதில் உடன்பாடு இல்லாததால், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு இப்போது அரசு ஒப்பந்தம் கிடைப்பதில்லை,' என்றார்.


ஞானம் புத்தக ஏஜன்சி, ஆங்கில மொழியில் விநியோகம் செய்திருந்த எந்த ஒரு புத்தகத்திலும் விற்பனை விலையை குறிப்பிடவில்லை. அதேநேரம், அவற்றுக்கு தனித்தனியாக பில்லில் விலை குறிப்பிடப்பட்டு இருந்தது. 20 ரூபாய் மதிப்புள்ள பல புத்தகங்கள் 75 ரூபாய் என்ற அளவில் பள்ளிக்கல்வித்துறை கொள்முதல் செய்து, மக்களிடம் சுரண்டியிருக்கிறது.


கடந்த ஜனவரியில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு பதவி உயர்வை ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இப்போதும், பலருக்கு 17 பி பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும்கூட இதுகுறித்து வெளிப்படையாக பேசத் தயங்குகின்றனர். 


இதுகுறித்து எஸ்எஸ்ஏ திட்ட ஊழியர்களிடம் கேட்டபோது, ''விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்களை அந்தந்தப் பள்ளிகளே வாங்கிக் கொள்வதற்காகத்தான் பள்ளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்பட்டு இருந்தது. இதில் எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.  


பள்ளிக்கல்வித்துறையில் நடந்துள்ள இந்த விஞ்ஞானப்பூர்வ ஊழல் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவின் கருத்தறிய, அவருடைய அலுவலக எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டபோது, அவர் பிஸியாக இருப்பதாகவே நமக்கு தகவல் கிடைத்தன. 


பின்னர் இதுபற்றி நாம் அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செம்மலையிடம் கேட்டதற்கு, ''பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் தரமானவையா இல்லையா? அதில் உள்ள பிரச்னைகள் என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்,'' என்றார். 


பள்ளிக்கல்வித்துறையில் தோண்டித்துருவினால் மேலும் பல ஊழல் பூதங்கள் கிளம்பலாம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.