Skip to main content

மூக்குத்தி தர்றோம்.. மோசடிகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Scam at thiruvannamalai

 

திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியில் ஸ்டார் பவுன்டேஷன் – ஸ்டார் சேவா மையம் செயல்படுகிறது. இந்த மையம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் என்.ஜி.ஓ அமைப்பினரை ஸ்டார் பவுன்டேஷன் மற்றும் ஸ்டார் சேவா மையத்தோடு இணைந்து செயல்படவைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

 

அவர்களின் வேலை பவுன்டேஷன் சார்பில் இலவச தையல் மிஷின் வழக்குதல், தாலிக்கு தங்கம், இலவச கனிணி பயிற்சி, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, காது கேளாதவர்களுக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்குதல், வேளாண்மை அபிவிருத்தி திட்டம், இலவச கறவைமாடு, ஆடு, நாட்டுகோழி வழங்குதல், தவணை கடன் வழங்குவது உள்ளிட்டவற்றை செய்துவருகின்றனர்.  

 

பொதுமக்களை ஸ்டார் பவுன்டேஷனில் உறுப்பினராக முதலில் இணைக்க வேண்டும். அதற்கு ஒருநபரிடம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஸ்டார் பவுன்டேஷன் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் எந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறார்களோ அதில் இணைய வேண்டும். அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

 

ரூ. 1 லட்சம் கடன் வேண்டும் என்றால் 10 ஆயிரம் முதலில் டெப்பாசிட் செய்ய வேண்டும். ஆடு வேண்டும் என்றால் 1500 ரூபாய் கட்டினால் இலவசமாக 4 ஆட்டுக்குட்டி தருவார்கள். 1000 ரூபாய் தந்தால் புடவையும், மூக்குத்தியும் தருவார்கள் எனச் சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக் கணக்கான பெண்கள் பணம் கட்டி சேர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஸ்டார் பவுன்டேஷனின் நிறுவன இயக்குநர்களான இளவரசி, அவரது கணவர் ஜெயராமன் இருவரும் சென்று 50 பேர், 60 பேருக்கு புடவை, மூக்குத்தி தருவது, ஆட்டுக்குட்டி தருவது எனச்செய்துள்ளனர்.

 

கடந்த ஜனவரி மாதம் ஒவ்வொரு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சம், லட்சமாக பணம் கொண்டு வந்து தந்துள்ளார்கள். மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று பிரமாண்டமாக விழா நடத்தி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனச் சொல்லியுள்ளார்கள்.

 

அந்த நாளில் விழா நடைபெறவில்லை. பணம் கட்டிய பெண்கள் ஸ்டார் பவுன்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடி தந்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘மேடத்துக்கு உடம்பு சரியில்லை’ எனச்சொல்லியுள்ளார்கள். அதன்பின் கால் செய்தால் மொபைல் ஃபோன் எடுப்பதில்லையாம். அந்தந்த மாவட்டங்களில் இருந்து நேரடியாக தலைமை அலுவலகமான திருவண்ணாமலை அலுவலகத்துக்கு வந்தபோது அது பூட்டியிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பல கோடி ஏமாந்துவிட்டோம் என புகார் தந்துள்ளார்கள்.

 

என்.ஜி.ஓ அமைப்பினர் மக்களை, அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், அந்த என்.ஜி.ஓக்களையே ஏமாற்றியுள்ளார் திருவண்ணாமலையில் என்.ஜி.ஓ நடத்தும் ஒருபெண்மணி. இந்த மோசடி தமிழ்நாடு முழுவதும் பெண்களை குறிவைத்து நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான கணவன் – மனைவி இருவரும் சிக்கி முழுமையான விசாரணைக்கு பிறகே மோசடி தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.