Skip to main content

வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி கல்லால் தாக்கி கொலை!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

salem district incident police investigation

 

சேலம் அருகே, வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அ.நாட்டாமங்கலம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோடி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். 

 

இவர்களுடைய இரண்டாவது மகன் மணி (எ) மணிகண்டன் (வயது 30). கட்டடத் தொழிலாளி. பிறவியிலேயே வாய் பேச இயலாத, காது கேட்காத  மாற்றுத்திறனாளி. 

 

கடந்த திங்கள்கிழமை (04.10.2021) இரவு 10.00 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, காரிப்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள கரட்டில் நிர்வாண நிலையில் மணிகண்டன் சடலமாகக் கிடப்பது குறித்து காரிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. 

 

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மர்ம நபர்கள் மணிகண்டனை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவருடைய வயிற்றில் மது பாட்டிலால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. அதனால் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் தெரிந்த நபர்களே மணிகண்டனை தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி என்பதால் மணிகண்டனால் கத்திக் கூச்சலும் போட முடியாமல் தடுமாறி இருக்கிறார்.

 

சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் நேரில் சென்று பார்வையிட்டார். காரிப்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

 

விசாரணையில், கொலையுண்ட மணிகண்டன் அக். 3ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுடன் அவர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த இருவரின் வீடுகளிலும் காவல்துறையினர் சென்று விசாரித்தபோது, இருவரும் திடீரென்று தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. 

 

தீவிர தேடுதலுக்குப் பிறகு, அவர்களில் ஒருவரைப் பிடித்துவிட்டனர். வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி, ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.  

 

விசாரணையில் பிடிபட்ட நபரும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிக்கிய வாழப்பாடியைச் சேர்ந்த மற்றொரு நபரும் சேர்ந்துதான் மணிகண்டனை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் தேடிவருகின்றனர். அவரும் பிடிபட்டால்தான், கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.