சேலத்தில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத விரக்தியில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் தாதகாப்பட்டி மேற்கு தெருவில் வசித்து வந்தவர் யுவராஜ் (41). இவருடைய மனைவி மான்விழி (35). இருவரும் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் ஒன்றாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்கிற நேகா (7), அக்ஷரா (5) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் நிதிஷாவுக்கு நீரிழிவு நோய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக அவளுக்கு பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளனர். தினமும் அவளுக்கு இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், சிறுமி அக்ஷராவும் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த கணவன், மனைவி இருவரும் கவலையில் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வசதி இல்லையே என்று எண்ணி அக்கம்பக்கத்தில் கூட யாரிடமும் பேசாமல் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்பத்துடன் இறந்துவிடலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், டிசம்பர் 26 ஆம் தேதி யுவராஜ் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பிச் சென்றார். அதன்பின் அவர்கள் வீடு திரும்பவில்லை. யுவராஜின் தம்பி சதீஷ்கண்ணா (39) அலைபேசியில் அழைத்துள்ளார். யுவராஜின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பலரிடம் விசாரித்தும் அவர் சென்ற இடம் தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ்கண்ணா, அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தமிழக - கர்நாடக எல்லையையொட்டி உள்ள பாலாற்று பகுதியில் யுவராஜ், அவருடைய மனைவி, இரு குழந்தைகளின் சடலங்கள் மிதப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், யுவராஜ் எழுதி வைத்த ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ''என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் வந்ததாதல் அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம். யாரும் எங்களைத் தவறாக நினைக்க வேண்டாம். மன்னித்து விடுங்கள். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம்.'' என்று உருக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். மனதைக் கல்லாக்கிக் கொண்ட கணவன், மனைவி இருவரும் முதலில் தங்கள் இரு குழந்தைகளையும் பாலாற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, பின்னர் அவர்களும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரிழிவு நோய் பிரச்சனையால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.