
தமிழகத்தில் நேற்று மேலும் 526 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் மொத்தம் 3,330 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மூன்று மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமானவர்கள் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலம் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கோடம்பாக்கத்தை பின்னுக்குத் தள்ளி ராயபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. கோடம்பாக்கத்தில் 563 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் ராயபுரம் மண்டலத்தில் இன்று 81 பேருக்கு கரோனா பாதிப்பு புதிதாக கண்டு பிடிக்கப்பட்டதால் அங்கு எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தில் திருவிக நகர் உள்ளது. அங்கு 513 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.