தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக இருந்த மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மீனாகுமாரியின் பதவிக்காலம், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது. அதன்பின், ஆணைய உறுப்பினராக இருந்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பொறுப்புத் தலைவராகக் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையச் சட்டப்படி, முதல்வர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு, மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்க வேண்டும்.
இதுசம்பந்தமாக விவாதிக்க, கடந்த வாரம் நடந்த கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். தகுதியானவரை இப்பதவியில் நியமிக்கவேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை, மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.