
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 முதல் மே.3 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 40 நாட்கள் கடந்த நிலையில் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள், அடிமட்டத்தினர், ஆதரவற்ற ஏழைகள் வருமானமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட உணவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் வாட்டம் போக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் இயன்ற அளவு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட மதிமுகவினர் சார்பில், சங்கரன்கோவிலில் மாநில மருத்துவரணி மா.செ. டாக்டர் சுப்புராஜ் மற்றும் மா.செ. தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் 250 நலிந்த ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை செய்த மதிமுகவின் நகர பொறுப்பாளர்களான ந.செ.ஆறுமுகச்சாமி மற்றும் ராஜமாணிக்கம், பாஞ்சாலி முருகன், முகம்மது ஹக்கிம், சிங்கம் புலி சசிமுருகன், ராஜகுரு உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொகுதியின் குருவிகுளம் மற்றும் மேல நீலிதநல்லூர் போன்ற பகுதிகளிலும் மதிமுகவினர் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.