Skip to main content

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Ration shop employees involved in the struggle

 

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில், மாநிலம் முழுக்க 20ந்தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மேசப்பன் முன்னிலை வகித்தார். அவர்களின் கோரிக்கைகளான, ‘தமிழகம் முழுவதும் உள்ள (ரேசன் கடை) நியாய விலைக்கடைகளில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் அரசு சார்பில் ரேசன் அட்டை தாரர்களுக்கு விநியோகிக்க வழங்கப்படும் பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும்.

 

தொடக்க கூட்டுறவு சங்கங்களில் அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பாக கவனித்து வருபவர்களுக்கு 30சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்று தர வேண்டும். சங்கங்களில் 2020-2021ம் ஆண்டிற்கான இறுதி தணிக்கை முடிவுற்ற நிலையில், அதற்கான தணிக்கை அறிக்கையை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிவரன்முறை செய்து, பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும்.

 

அரசு நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 1-11-2021ம் தேதி வரை வட்டி வழங்குவதாக தெரிவித்ததை, தள்ளுபடி தொகை விடுவிக்கும் நாள் வரை சங்கங்களுக்கு வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு கரோனா காலத்தில் ரேசன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதற்கு, முதன்மை சங்கங்களில் இருந்து விளிம்புத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக ஆண்டு இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய நிர்பந்தம் செய்து பணியாளர்களை அதிகாரிகள் ஒருமையில் பேசி வருவதை தடுத்து, பணியாளர் நலன் பாதுகாத்திட வேண்டும்.

 

பயிர்கடன் வழங்குவதில் மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’என்ற  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று அவர்களின் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார்கள். மேலும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற  ஜனவரி  5 ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.