Skip to main content

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Rameswaram fishermen struggle

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (22.06.2024) காலை வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 22 மீனவர்களையும் காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அதன் பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுவிக்ககோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (24.06.2024) ஒரு நாள அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசு துரிதமாக உரிய நடவடிக்கை எடுத்து 2 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும், கடந்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்