Skip to main content

நீதிமன்றம் என்னை விடுவித்த நிலையில் வேண்டுமென்றே என் மீது பொய்யைப் பரப்புகின்றனர்! -மதுரையில் ராமர்பிள்ளை பேட்டி!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

நீதிமன்றம் என்னை விடுவித்த நிலையில் மத்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே என் மீது பொய்யைப் பரப்புகின்றனர். வரும் 10ஆம் தேதி முதல் கேரளாவில்  மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்குகிறோம். தமிழகத்தில் மூலிகை பெட்ரோல் லிட்டர் 20 ரூபாய்க்கு வழங்க முடியும் என மதுரையில் மூலிகை எரிபொருள் கண்டுபிடிப்பாளர் ராமர்பிள்ளை தெரிவித்தார். 

 

கழிவு நீர் மூலமும், விவசாயக் கழிவுகளைக் கொண்டும் பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ சமையல் எரிவாயு தயாரித்த ராமர்பிள்ளை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கேரளா அரசு மூணாறு பகுதியில் 1,600 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்து மூலிகை பெட்ரோல் உற்பத்தியை உருவாக்க அனுமதி அளித்துள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் உற்பத்தியை தொடங்குகிறோம் எனக் கூறியுள்ளார். மேலும், மூலிகை பெட்ரோல் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர் எனவும் மூலிகை எரிபொருட்கள் குறித்து என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையால் போதிய ஆதாரத்தை நிரூபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்தது. மத்திய புலனாய்வுத் துறை என் கண்டுபிடிப்பு குறித்து தவறான தகவலை பரப்பிவருகிறது என்றார்.  

 

லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலை விட பயோ டீசல் வீரியம் மிக்கது என ராணுவத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார். வரும் 9ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்கள் முன்னிலையில் மூலிகை பெட்ரோலை உருவாக்கி காட்டவுள்ளோம், ஆடிட்டர் குருமூர்த்தி உதவுவதாகச் சொல்லிய நிலையில் மூலிகை எரிபொருட்களை தயாரிக்க தொடங்கினேன், சி.பி.ஐ தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக குரூமூர்த்தியே கூறியுள்ளார். என்னுடைய மூலிகை பெட்ரோலில் கெமிக்கல் கலக்கவில்லை என்பதை நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது என்றார். 

 

மேலும் பேசுகையில் இந்தியாவை முன்னேற்ற பயோ பெட்ரோல் தயாரிப்பை தவிர வேறுவழியில்லை, கேரளாவில் 77 பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்கவுள்ளோம் எனவும், தமிழகத்தில் பயோ பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளோம், எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது எனவும் கூறினார். மேலும், மத்திய அமைச்சர்கள் சிலர் தடுக்கின்றனர், என்னுடைய தயாரிப்பை முடக்க நினைப்பவர் யார் என்பது குருமூர்த்திக்கு தெரியும், மூலிகை எரிபொருட்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை 39 ரூபாய்க்கு கொடுப்போம், பயோ கேஸ் 16 லிட்டர் ரூ.250 -க்கு வழங்கவுள்ளோம், தமிழகத்தில் தயாரிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் 20ரூபாய் விற்பனை செய்யவுள்ளோம், என்னுடைய கண்டுபிடிப்பை என் தாயிற்கு சமர்பிக்கிறேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்