Skip to main content

“7.5 ல படிக்க சீட்டு கிடைச்சிடுச்சு.. கல்லூரி போகத்தான் காசு கிடைக்கல...” - மாணவரின் கண்ணீர் கதை

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Puthukottai student struggle to go to college

 

தமிழகத்தில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும் அத்தனை மாணவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரி செல்ல வசதியில்லாமல் முடங்கியிருக்கின்றனர். கடன் வாங்கியாவது தங்கள் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வீடு வீடாக ஏறி இறங்கி வட்டிக்குக் கடன் வாங்கும் தாய், தந்தைகளை நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றன.

 

அப்படி ஒரு மாணவர் தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். உடல் நலமில்லாத தந்தை. தினக்கூலி வேலை செய்யும் தாயின் வருமானம் குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கே சரியாகிறது. பொறியியல் படிக்கும் அண்ணன், முதுகலை பட்டம் படித்துள்ள அக்கா, இவர்களுக்கு வாங்கிய கடனையும் வட்டியையுமே கட்ட முடியாத நிலையில் மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற பிரபாகரன் இந்த ஆண்டு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்று கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

 

சேர்க்கைக்கு போகவே பணமில்லாத நிலையில் சிலரது உதவியால் சேர்க்கை முடிந்தது. அடுத்துள்ள நடைமுறை செலவுகளுக்காக பிரபாகரனின் தாய் உறவினர்கள், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு போய் வருகிறார். செவ்வாய்க்கிழமை கல்லூரி திறப்பு. ஆனால், கல்லூரி செல்லத் தேவையான பொருட்களைச் சேகரிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தாயும் மகனும்.

 

Puthukottai student struggle to go to college

 

பிரபாகரன் நம்மிடம்.. “ரொம்ப ஏழ்மையான குடும்பம். அம்மா ஒருவரின் உழைப்பு எங்களோட உணவுத் தேவைக்கு சரியாக இருக்கும். அண்ணன், அக்கா படிப்பிற்கு வாங்கிய கடனே வட்டி, வட்டிக்கு வட்டினு ஏறிகிட்டு இருக்கு. கஜா புயலில் மரம் விழுந்து உடைந்த வீடு கூட சரிபண்ண முடியல. இப்ப நான் ஆசைப்பட்ட மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் படிப்பை முழுமையாக முடிச்சு வெளியே வரமுடியுமா என்ற கேள்விக்குறியோட நிற்கிறேன்.

 

அமைச்சர் மெய்யநாதன், நான் படிச்ச பள்ளியிலிருந்தும், அணவயல் அறம் அறக்கட்டளையிலிருந்தும் கொடுத்த உதவிகளைப் பெற்று அட்மிசன் போட்டுட்டு சில உடைகள் வாங்கி இருக்கிறேன். புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை ஏ.டி. சுந்தர்ராசு சார் பொருட்கள் வாங்கி தந்தாங்க. இது போதுமா என்றால், என்னால சொல்ல முடியல. அரசாங்கம் கல்வி, விடுதிக் கட்டணம் கட்டுவதால் ரொம்ப சிரமம் குறைந்திருக்கிறது. இதனால எனக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கும், அரசுக்கும் நன்றி. இப்ப கூட கல்லூரிக்குக் கிளம்பனும். ஆனா, அம்மா யார்கிட்டயோ கடன் கேட்க போய் இருக்காங்க. என் படிப்பிற்காக யாரு உதவினாலும் காலமெல்லாம் மறக்கமாட்டேன்.” என்றார்.

 

மருத்துவப் படிப்பு என்பது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 5 ஆண்டுகள் வரை ஆகும் செலவினங்களை இந்த மாணவர் எப்படி சமாளிக்கப் போகிறார். இந்த ஏழை மாணவனுக்கு கொடையுள்ளம் படைத்தவர்கள் உதவினால் மட்டுமே சாத்தியமாகும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.