Skip to main content

'நரம்பியல் மருத்துவர்களின்றி தவிக்கும் பொதுமக்கள்'- குறைகளை கொட்டித்தீர்த்த நகர்மன்ற உறுப்பினர் 

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'Public suffering without neurologists' - city councilor vents grievances

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மக்கின்,ஜெயச்சித்ரா, தஸ்லீமா,புகழேந்தி, கல்பனா உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் நகர்மன்ற தலைவரின் முயற்சியால் செய்த பணிகள் குறித்து பேசினார்கள்.

இதில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் தில்லை மக்கீன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை. இருதயம் மற்றும் நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டவர்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் பல்வேறு தரப்பு ஏழை மக்கள் உயிரை காப்பாற்ற முடியாமல்  இருப்பதாகவும் பேசினார்.  மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் சமீபத்தில் இருதய மருத்துவர் இல்லாததால் இறந்ததை சுட்டிக்காட்டினார். உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமித்து போதிய சிகிச்சை ஏற்பாடு செய்ய வேண்டும் என பல நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதற்கு நகர்மன்ற தலைவர் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமிக்கவும், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதனை அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவின் போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.