Skip to main content

சேலத்தில் கோஷ்டி மோதல்... ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Factional clash in Salem; Rowdy massacred
                                                                 வினோத்குமார்

 

சேலத்தில் ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் வினோத்குமார் (26). ரவுடியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்களான மணிகண்டன் (26), பிரதாப் (23),  உதயகுமார் (17) ஆகியோருடன் திங்கள்கிழமை (06.09.2021) இரவு காளிகவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சட்டென்று அந்த கும்பல், கத்தி, வீச்சரிவாளால் வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

 

ரத்த வெள்ளத்தில் நான்கு பேரும் சரிந்ததை அடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டது. இதில் நான்கு பேருக்கும் தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில், வினோத்குமார் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை, ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நடந்திருப்பது தெரியவந்தது.

 

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரையை கூலிப்படையினர் வெட்டிப் படுகொலை செய்தனர். அவருடைய மாமியார் பேபிக்கு, எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடி ஜானின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜானின் கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் செல்லத்துரை தரப்புக்கும், ஜான் தரப்புக்கும் இடையே மேலும் பகை மூண்டது. இந்நிலையில்தான் ஜானின் கூட்டாளிகள், செல்லத்துரை தரப்பைச் சேர்ந்த நான்கு பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுச் சென்றதும், அதில் வினோத்குமார் பலியானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

 

அதன்பேரில் சங்ககிரி பகுதியில் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்கள்தான் கிச்சிப்பாளையம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்வர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்ற கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர், சங்ககிரி விரைந்து சென்று, பிடிபட்ட கும்பலை சேலத்திற்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (24), பேரன் என்கிற விஜி (22), கமல் (20), சஞ்சய் (20), நந்தகுமார் (22), மாதவன் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

 

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பழனிசாமி உள்பட நான்கு பேரை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இவர்கள் பத்து பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அடுத்தடுத்து மேலும் சில கொலைகள் விழும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கிச்சிப்பாளையம் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளதோடு, ரவுடிகளின் கொட்டத்தைக் காவல்துறையினர் அடியோடு ஒடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.