Skip to main content

முரணாக பேசிய வடமாநில வாலிபர்! மூன்று வடமாநில இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

Police arrest three North Indian youths

 

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (30.07.2021) சோமனூர் பகுதியில் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில வாலிபரை நிறுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனையடுத்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவன்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரகுமார் என்பதும் சோமனூர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை அழைத்துக்கொண்டு அந்தக் குடோனுக்குச் சென்றனர்.

 

அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்தக் குடோனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகா சிவசக்தி ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திவருவதும், மகா சிவசக்தி உரிமையாளர் மோதிலால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குட்கா பொருட்களைப் பதுக்கிவைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்துவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திர குமார் (24), உத்தம் குமார் (21), பிரேம் சிங் (20) ஆகிய மூவரையும் கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.