Skip to main content

சாராயம் விற்று சிக்கிக்கொண்ட பாமக மாவட்ட நிர்வாகி; தோல்வியில் முடிந்த பஞ்சாயத்து

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 


திருவண்ணாமலை நகரத்தில் வீட்டில் வைத்து போலி மதுபானம் விற்கிறார்கள், கூடவே சாராயம் விற்பனை செய்கிறார்கள் என வந்த தகவலின் அடிப்படையில் திருவண் ணாமலை நகர காவல்துறை அதிகாரிகள், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 200 கள்ள மதுப்பாட்டில்கள் மற்றும் சாராய கேன்கள் இருந்துள்ளன. அதனை கைப்பற்றிய போலிஸார் அருண்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பிரபு என இருவரை காவல்நிலையம் அழைத்து  சென்றுள்ளனர்.

 

w

 

அருண்குமார் என்பவர், பாமகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்கிற தகவல் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அருண்குமார் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும் பாமகவினர் அதிர்ச்சியாகினர்.


மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் கட்சி மற்றும் மது விலக்கு என்பதை கட்சி கொள்கையாகவே வைத்துள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகியே கள்ள மது விற்பனை செய்தார் என கைது செய்யப்பட்டால் அவமானம் என நினைத்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் காவல்துறை அதிகாரிகளிடம், பேசியுள்ளனர். இதனால் ஆகஸ்ட் 26ந்தேதி மாலை கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆகஸ்ட் 27ந்தேதி காலை வரை வழக்கு போடாமல், கைது செய்ததை கணக்கு காட்டாமல் வைத்திருந்தனர் காவல்துறையினர். 


ஆளும்கட்சியான அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதால், அதனை பயன்படுத்தி வழக்கு போடாமல் தடுக்க சில முயற்சிகளை பாமக நிர்வாகிகள் எடுத்தனர். ஆனால் அதற்குள் இந்த தகவல் வெளியே பரவிவிட்டதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது எனச்சொல்லி கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை.


வழக்கமாக இப்படி கைது செய்யப்படுபவர்களை மதுபாட்டில்களோடு நிற்கவைத்து புகைப்படம் எடுத்து பத்திரிக்கைக்கு காவல்துறையினர் தருவது வழக்கம். இந்த வழக்கில் காவல்துறை அப்படி எதுவும் தரவில்லை. கைது செய்யப்பட்டவர்களை பத்திரிக்கை, தொலைக்காட்சி முன்பு காட்டாமல் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

சார்ந்த செய்திகள்