Skip to main content

பெண்கள் கொலையில் சிக்கிய வேட்டைக்காரன் 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

Person arrested in ariyalur two woman passed away case

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் - மீன்சுருட்டி சாலையில் உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி(35), கண்ணகி(41) எனும் இரு பெண்கள் கடந்த 22ம் தேதி அவர்கள் ஊருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் களவு போயிருந்தது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அருகே இருந்த காட்டுப் பகுதியில் மழைக்காளான் பறிக்கச் சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் அப்துல்லா கான் தனிப்படைகள் அமைத்து கொலையாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், விசாரணையில் மோப்பநாயை போலீசார் பயன்படுத்தினர். அந்த மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள பால்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சென்றது. 

 

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் காட்டுப்பகுதியில் முயல், காட்டுப்பன்றி, உடும்பு போன்ற வன விலங்குகளை வேட்டையாட அடிக்கடி செல்பவர் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கடந்த சில தினங்களாக பால்ராஜ் அவரது வீட்டில் இல்லை என்பதையும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பால்ராஜ், தனது இரு சக்கர வாகனத்தில் த.பழூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பால்ராஜை மடக்கி பிடித்தனர்.  

 

பிடிப்பட்ட பால்ராஜிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “கொலை நடந்த இடத்திற்கு அருகே எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதனால், அங்கு அவ்வப்பொழுது காட்டு விலங்குகளை வேட்டையாட செல்வேன். சம்பவத்தன்றும் முயல் வேட்டைக்காக அங்கே சென்றேன். அப்போது ஒரு புதரில் முயல் அசைவது போல் தோன்றியது. அதனால் முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் சுளிக்கி எனும் ஆயுதம் கொண்டு அசைவு தெரிந்த இடத்தில் குத்தினேன். சுளிக்கி என்பது நீண்ட கழியில் கூர்முனை பொருத்தப்பட்டிருக்கும் ஒரு வித ஈட்டி போன்ற ஆயுதம். நான் குத்தியதும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. 

 

நான் திடுக்கிட்டு அருகே சென்று பார்த்தபோது அந்தப் புதரில் காளான் பிடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தொடையில் சுளிக்கி குத்தப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணிடம் முயல் என்று தவறுதலாகக் குத்திவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை திட்டியபடியே கையில் இருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயன்றார். தகவல் கிடைத்து ஊர்க்காரர்கள் திரண்டு வந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து பயந்து என் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து உட்பட சில இடங்களில் குத்தினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அந்தப் புதரிலேயே அவரை போட்டுவிட்டு யாரும் இல்லை, யாருக்கும் தெரியாது என்று எண்ணியபடி திரும்பினேன். அப்போது அவருடன் வந்திருந்த இன்னொரு பெண், இவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு வந்தார். 

 

அவரை உயிரோடு விட்டால் கொலை செய்த விஷயம் வெளியே தெரிந்து விடும் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கட்டையால் அவர் தலையில் ஓங்கி அடித்தேன். அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்று அங்கிருந்து எனது இரு சக்கர வாகனத்தில் த.பழூருக்கு சென்று தலைமறைவானேன். இது நகைக்காக நடந்த கொலை என்று திசை திருப்புவதற்காக அவர் அணிந்திருந்த 6.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றேன்” என்று பால்ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் பால்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களும் கொலையாளியும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்று போலீசார் அந்த இரு கிராமத்திலும் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பால்ராஜ் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டை ஆடியதாக ஏற்கனவே அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.