Skip to main content

பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் சாவு: பயிர் சேதம் குறித்து ஆய்வு தேவை!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

 

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், வேதாரண்யம அருகே விவசாயி திருநாவுக்கரசர் வெளியிலிருந்து டேங்கர் சரக்குந்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வயலில் பாய்ச்சியும் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் வாங்கியக் கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர் உயிரிழந்திருக்கிறார். வறட்சி பாதிப்பின் தீவிரம் துல்லியமாகத் தெரியாத நிலையில், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். அதன்பின் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற விவசாயி, வறட்சியில் பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இறந்தார் என்ற செய்தி கேட்டு, பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

வறட்சி காரணமாக எந்த சோகம் நிகழ்ந்து விடக்கூடாது என அனைவரும் கவலைப் பட்டுக்கொண்டு இருந்தோமோ அந்த சோகம் நிகழ்ந்து விட்டது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தமது ஊருக்கு அருகிலுள்ள புல்வெளி கிராமத்தில், வேதாரண்யத்திலுள்ள  வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு  அவர் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையில் மூழ்கி சேதமடைந்தன.  
 

இதனால்,  அவர் பெரும் கடனுக்கு ஆளானார். நடப்பாண்டில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. சம்பா பயிருக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு மிகவும் தாமதமாகத் தான் காவிரி நீர் வந்தது என்பதால், திருநாவுக்கரசு நவம்பர் இறுதியில் தான் சாகுபடிப் பணிகளைத் தொடங்கினார். மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், கடந்த ஜனவரி 28-ஆம் தேதியே அணை மூடப்பட்டது. அப்போது திருநாவுக்கரசின் சம்பா பயிர்கள் பாதிக் கட்டத்தைக் கூட தாண்டியிருக்கவில்லை. இதையடுத்து வெளியிலிருந்து டேங்கர் சரக்குந்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வயலில் பாய்ச்சியும் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் வாங்கியக் கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. 
 

விவசாயி திருநாவுக்கரசின் மறைவு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. காவிரிப் பாசன மாவட்ட உழவர்கள்  எந்த அளவுக்கு பரிதாபமான நிலையில் உள்ளனர் என்பதற்கு திருநாவுக்கரசின் மறைவு உதாரணமாகும். திருநாவுக்கரசின் மறைவுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்த கர்நாடகத்தின் பிடிவாதம் ஒரு காரணம் என்றால், கர்நாடகத்திடமிருந்து நீர் பெற ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல் நாடகங்களை அரங்கேற்றிய பினாமி அரசு இன்னொரு காரணம். தமிழகத்தில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற 15 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்ற நிலையில், கர்நாடக அணைகளில் 38 டி.எம்.சிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்தது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்திடமிருந்து நீரைப் பெற்றிருந்தால் திருநாவுக்கரசின் பயிர்கள் கருகியிருக்காது; அவரும் அதிர்ச்சியில் இறந்து குடும்பத்தினரை தவிக்க விட்டிருந்திருக்க மாட்டார். ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அஞ்சிக் கொண்டு, கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து தண்ணீர் வாங்கப்போவதாக அறிவித்து, நாடகம் நடத்தி, இறுதியில் எதுவும் செய்யாமல் தண்ணீரையும் வாங்காமல் உழவர்களுக்கு பெருந்துரோகம் செய்தது பினாமி அரசு.
 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்களில் பாதியளவு கூட இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. பெருமளவிலான பயிர்கள் தண்ணீரின்றிக் கருகத் தொடங்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் திருநாவுக்கரசுக்கு ஏற்பட்ட சோகம் மற்ற உழவர்களுக்கும் ஏற்படக்கூடும் என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். கருகும் பயிர்களைக் காப்பது இனி சாத்தியமற்றது எனும் நிலையில் உழவர்களைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்களை இழந்த உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில்  உள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு வர அரசு கை கொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் தான் தமிழக உழவர்களை அதிர்ச்சி சாவு மற்றும் தற்கொலைகளில் இருந்து காப்பாற்ற முடியும்.
 

எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்ற கொள்கை முடிவை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். வறட்சி பாதிப்பின் தீவிரம் துல்லியமாகத் தெரியாத நிலையில், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். அதன்பின் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். 

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விழுப்புரத்திலும் விஷ கள்ளச்சாராய விற்பனையா? - பாமக நிறுவனர் ராமதாஸ்  

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
ramadoss question illicit Liquor sale in Villupuram too?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று சென்னை சேர்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து ராயாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது. நச்சு சாராயம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற சுமை தூக்கும் தொழிலாளி சென்னையிலிருந்து  சரக்குந்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 17-ஆம் தேதி விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு சரக்கு இறக்கி முடித்த பிறகு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த அவர் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

வீட்டில் வைத்து அந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை 20-ஆம் தேதி குடித்த கிருஷ்ணசாமி கடுமையான வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் பின்னர் இராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டாலும் கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த கூலி தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு ஏற்பட்ட பாதிப்பு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலும் நச்சு சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதா? அல்லது கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தை எவரேனும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு கொடுத்தார்களா என்ற வினா எழுகிறது. இதற்கு விடை காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நச்சு சாராயம் விற்கப்படுவதைத் தான் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. கள்ள சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனால் எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எவருக்கேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.