Skip to main content

மியான்மரில் இருந்து சென்னை திரும்ப இருந்த மீனவர்களில் ஒருவர் மாயம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

One of the fishermen who was returning to Chennai from Myanmar was missing

 

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 55 நாட்களுக்குப் பிறகு மியான்மார் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்களை தாயகம் அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளும் மாநில அரசு மற்றும் மீன்வளத்துறை எடுத்துவந்த நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 5 மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவினால், காசிமேட்டில் குறைந்தளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 50 படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். அந்த நேரத்தில் சென்னை காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் திருவெற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், லட்சுமணன், சிவகுமார், பாபு உள்ளிட்ட 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 23 இல் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 7 நாட்களில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், பல நாட்களாகியும் மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர். 

 

இது தொடர்பாக பாதிக்கப்பட குடும்பங்கள் அமைச்சரிடம் புகார் அளித்தனர். மேலும், சாலை மறியல் முற்றுகைப் போராட்டம் ஆகியவை நடத்தியக் காரணத்தால், மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை மூலமாக தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், இரவு ரோந்து சென்ற மியான்மார் கடற்படையினர் விசைப்படகுடன் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில், தமிழக மீணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்திய மீன்வளத்துறை அமைச்சர், அவர்களை அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மியான்மர் நாட்டில், மோசமான வானிலை நிலவியது. சற்றே கடல் சீற்றமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஒன்பது மீனவர்களில் இரண்டு பேர் (ரகு மற்றும் பாபு) தாங்கள் வந்த விசைப்படகு பாதுகாப்பாக உள்ளதா என்று பார்ப்பதற்காக மியான்மர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருடன் விசைப்படகில் சென்று தங்களின் விசைப்படகைப் பார்த்தனர். 

 

Ad

 

மேலும், நிறுத்திவைக்கப்பட்ட விசைப்படகில் இருந்து பாபு மற்றும் ரகு ஆகியோர் கயிற்றைக் கட்டுவதற்காக முயற்சி செய்தபோது தவறி விழுந்துள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மியான்மர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஈடுபட்டனர். இதில் ரகுவை மட்டும் மீட்டனர். ஆனால் பாபு மாயமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து மியான்மர் கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்கள் தீவிரமாக பாபுவை தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்