Skip to main content

என்எல்சி நிர்வாக ஊழியர் பணி நீக்க உத்தரவிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு...

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
nlc

 

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றியவரை என்எல்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இது சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக பல்வேறு கிராம விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்படி நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்படி, சதாசிவம் என்பவருக்கு 1989ம் ஆண்டு என்எல்சியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக பணி செய்து வந்த சதாசிவத்தை என்எல்சி நிர்வாகம் 2014ல் விதிமுறைகளை மீறி நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றுள்ளார், என்எல்சிக்கு நிலம் கொடுத்த ராஜா கண்ணு என்பவரின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் அல்ல சதாசிவம். எனவே அவரது பணி நியமனம் செல்லாது என்றுகூறி என்எல்சி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து சதாசிவம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு சதாசிவம் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சதாசிவம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் டி. கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவில், என்எல்சியில் வேலை கேட்டு சதாசிவம் விண்ணப்பிக்கவில்லை. சதாசிவத்தின் மாமனார் ராஜாக்கண்ணு அவர் நிலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மருமகன் சதாசிவத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்படி என்எல்சி நிர்வாகம் பணி வழங்க முன்வந்துள்ளது.

ராஜாக்கண்ணு தனது உடல்நிலையை காரணம் காட்டி, மருமகன் சதாசிவத்துக்கு பணி வழங்க கேட்டதால் அவருக்கு என்எல்சி நிர்வாகம் பணி வழங்கியுள்ளது. உண்மையை மறைத்து பணிநியமனம் பெற்றார் சதாசிவம் என்பதற்கு என்எல்சி தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 24 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருந்துள்ளார் சதாசிவம். பணி நியமனத்தின்போது உரிய ஆவணங்களை நிர்வாகம் பரிசீலித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் மீது உள்ள தவறுக்காக மனுதாரரை குற்றம் கூறமுடியாது. 54 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இது சதாசிவத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

எனவே வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சதாசிவம் மோசடி செய்யவில்லை. பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, கட்டாய ஓய்வு திருத்தம் செய்யப்படுகிறது. அவருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதி அரசர் கிருஷ்ண குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

கவுண்டமணி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
goundamani land issue

கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதையடுத்து கட்டுமான பணிகள் 2003 ஆம் ஆண்டு வரை தொடங்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வழக்கறிஞர் ஆணையர், சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் வணிக வளாகம் கட்டுவதற்காக, கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.