![nilgiris shooting mattam ninth std school student incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/fyEcKrA3oRSZNq7WiZf5uf1Bq43s0s4nTBdNvcUxYlE/1682491612/sites/default/files/inline-images/01%20art%20police%20siren_14.jpg)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சூட்டிங் மட்டம் என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவி வீட்டில் இருந்து தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளி நேரம் முடிந்தும் மாலை வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த ,மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அங்கர்கோடு என்ற பகுதியில் உள்ள புதரில் மாணவி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அங்கு சென்று மாணவியை பார்த்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் உடல் அருகே கார் ஒன்று இருந்துள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு கும்பல் காரில் மாணவியை சம்பவ இடத்திற்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அந்த கார் கக்கோடி மந்து என்ற பகுதியை சேர்ந்த ராஜினேஷ் (வயது 25) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் உடலானது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தலைமறைவாக உள்ள ராஜினேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ராஜினேஷ் பள்ளி மாணவிக்கு உறவினர் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.