Skip to main content

“எவ்ளோ தைரியம் இருந்தா கோவிலுக்குள்ளே வருவீங்க” - பட்டியலின இளைஞர்களை தாக்கிய கும்பல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

  mob attacked youths who had come to worship at the temple

 

மதுரையில் கோவிலுக்குள்ளே சென்ற பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதிக்கு அருகே உள்ளது மையிட்டான்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள முக்கியத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது முத்தாலம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த முத்தாலம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இரண்டு நாட்களுக்கு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோஷ்டி மோதல் காரணமாக இந்த கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், அந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் அனுமதியுடன் கடந்த 24 ஆம் தேதியன்று கோயில் திருவிழா தொடங்கியுள்ளது. ஊர்மக்களின் ஆரவாரம், நேர்த்திக்கடன்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என விமரிசையாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று மையிட்டான்பட்டி கிராம மக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வந்துள்ளனர். அப்போது மையிட்டான்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விஜயபாண்டி மற்றும் அவரது நண்பர் மகேஸ்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

 

மேலும், அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர். இத்தகைய சூழலில் இரு பிரிவினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர், "நீங்கலாம் எந்த சாதிக்காரங்கடா.. எவ்ளோ தைரியம் இருந்தா கோயிலுக்குள்ளே வருவீங்க. உங்கள யாருடா உள்ள விட்டது என சாதி பெயரைக் கூறி இழிவாகப் பேசியதுடன் அவர்களை கண்மூடித்தனமாக சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த சமயம் அங்கிருந்த கிராம மக்கள் சிலர் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதே நேரம், கோயில் திருவிழாவில் கலவரத்தை உண்டாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட பிரவீன், மருதுபாண்டி, ஐயப்பன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் கள்ளிக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.