Skip to main content

"மனித நேயத்துடன் அரசு செயல்படுகிறது!" - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு...

Published on 06/02/2021 | Edited on 07/02/2021

 

minister sengottaiyan speech at erode


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 128 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

 

விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்த 8 கிராம் தங்கத்தின் விலை, அப்போது நிதி ஒதுக்கிய போது ரூபாய் 32 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது ரூபாய் 36 ஆயிரமாக உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளையும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நிரத்தர பட்டாக்களாக மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 

minister sengottaiyan speech at erode


'நாங்கள் சொன்னதால்தான் அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என்று சிலர்  சொல்லுகிறார்கள். ஆனால், இன்று விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்துள்ளது. மனிதநேயத்துடன் நமது அரசு செயல்படுகிறது. பொங்கல் பரிசு ரூபாய் 2,500 வழங்க வேண்டும் என அவர்கள் சொன்னார்களா? நாங்கள் செய்துள்ளோம். ஆட்சியில் இருப்பவர்கள் நாங்கள்; எங்களால் மட்டுமே செய்யமுடியும். தேர்தல் களத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், செயல்படுத்த முடியாது. வாக்குகளை மக்களிடம் ஏமாற்றி வாங்கவே அவர்கள் பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். 
 

minister sengottaiyan speech at erode


தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் சொன்னார்கள் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரமுடியாது என்று, ஆனால் தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அரசுக்கு 18 ஆயிரம் கோடி நிதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும் மக்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு செய்யும் பல்வேறு பணிகளை மக்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்லுங்கள்" என்றார். 

 

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.