Skip to main content

அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு... போலீசார் தீவிர விசாரணை!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Male body found at viluppuram


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது சொர்ணாவூர். இந்த கிராமத்தின் அருகில் முட்புதர்கள் நிரம்பிய பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதிக்கு ஆடு மாடுகளை மேய்க்கச் சென்றவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் திண்டிவனம் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி கணேசன் மற்றும் போலீசார் சொர்ணாவூர் சென்று முட்புதரில் தேடியுள்ளனர். அங்கே அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. 

 

அதன் அருகில், ஒரு பேக் இருந்துள்ளது. அதை, போலீசார் ஆய்வு செய்தபோது அந்த பேக்கில், இறந்தவரின் ஆதார் கார்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை செய்ததில் இறந்தவர், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வடக்கு மாங்குடியைச் சேர்ந்த கோதண்டபாணி என்பவரது மகன் ரவிச்சந்திரன் என்பதும் இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. 


இதையடுத்து கைப்பற்றிய அந்த உடலை, போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் முகவரியை வைத்து அவரது உறவினர்களுக்குத் தகவல் அனுப்பி உள்ளனர். இறந்து அழுகிய நிலையில் கிடந்த ரவிச்சந்திரன், சென்னையில் பணி செய்தவர். இங்கு எப்படி வந்தார் யாராவது இங்கு அழைத்து வந்து கொலை செய்து வீசி விட்டுச் சென்றார்களா அல்லது குடிபோதையில் முட்புதரில் சிக்கி இறந்து போனாரா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்