
கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளும் தீவிரமாக நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மதுரை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி கரோனா நோயாளிகள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா அதிகரிக்கும் பகுதிகளில், முக்கியத்துவம் அளித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நோயாளிகள் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பு மதுரை மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.