Skip to main content

ஆளே இல்லையாம்... போட்டியின்றி 47 ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு..!

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிந்து, மனு வாபஸ் வாங்கும் தேதியும் முடிந்துள்ளது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சி பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் 47 பஞ்சாயத்துக்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

local body election-Tiruvannamalai

 

 

இதில் பெரும்பான்மையானவர்கள் திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேரும், மதிமுகவை சேர்ந்த ஒருவர் என போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் ஒன்றிய குழு கவுன்சிலர்களில் மூன்று பேர் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மண்டை ஓட்டுடன் அகோரி; பயத்தில் மக்கள் - ஆண்மீக நகரில் அட்டகாசம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Aghori brought a skull to Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பெல்லாம் பௌர்ணமி நாட்களில் மட்டும்தான் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றுவிட்டு ஊருக்கு செல்வார்கள். இப்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதை 24 மணி நேரமும் கிரிவல பக்தர்களால் நிறைந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்களைத் தாண்டி இப்போது வடஇந்தியாவின் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த தேவையான வசதிகள் இல்லாததால் நகரத்தின் முக்கிய சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் தினம், தினமும் நகரமே போக்குவரத்து பிரச்சனையால் சிக்கி தவிக்கிறது.

அப்படித்தான் ராஜகோபுரம் அருகே முருகர் தேர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு கார் சாலை ஓரமே நிறுத்தி இருந்தது. முதலில் யாரோ நிறுத்திவிட்டு சென்றுயிருப்பார்கள் என நினைத்தனர், அந்த காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த காரை எடுக்கச்சொல்லி வாகன ஓட்டிடம் சொல்வதற்கு காரின் முன்பக்கம் சென்றபோது அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அப்போது காரின் முன்பக்க கண்ணாடி டேஸ்போர்டில் வரிசையாக மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தன. காரின் கண்ணாடி, பேனட் ஆகியவற்றில் டேஞ்சர் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கார் டோர், பின்பக்க கண்ணாடியில் நிர்வாண சாமியாரின் படங்கள், ஒட்டப்பட்டு உள்ளே என்ன இருப்பது என்னவென தெரியாமல் மறைத்திருந்தது. கார் யாருடையது எனப் பார்க்க வாகன எண்ணை பார்க்க தேடியபோது வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகை தான் இருந்தது. காருக்குள் என்ன இருக்கிறது எனப்பார்க்க இன்னமும் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நகர காவல்நிலையத்தில் இருந்து போலிஸாரும், போக்குவரத்து போலிஸாரும் அங்கே வந்தனர்.

காவல்துறையினர் காரை கண்ணாடி வழியாக சோதித்துவிட்டு, காருக்குள் மண்டை ஓடுகள், முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் மீது எழுதியிருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அழைத்தனர். போலிஸ் அழைத்தும் சவகாசமாக ஒரு மணி நேரம் கழித்து கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் வந்தவர் நான் தான் காரின் உரிமையாளர் என்றார். காசியில் அகோரிகள் இருப்பார்களே அப்படியிருந்தார்.

Aghori brought a skull to Tiruvannamalai

அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். காரில் இருந்து இறங்கி உள்ளே வா என அழைத்தபோது, எனக்குச் சட்டம் என்று எதுவும் கிடையாது, உங்க சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பெயர் கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு எனக் கூறி தன் உடலில் இருந்த சில ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்த போலீசார், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னையில் பதிவு செய்துயிருந்தது. உள்ளே நம்பர் பிளேட் இருந்தது. அதன்மீது தான் அகோரி என எழுதிய போர்டு தொங்கவிட்டிருந்ததைக் கண்டறிந்தனர். 


விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார். திருவண்ணாமலைக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் செயல்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பாமல் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கடைகளுக்குள் தீ; ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Goods worth Rs 1 crore were destroyed in a fire at a shop in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரத்தில் ஜீன் 2 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன், இரண்டு மணி நேரம் பெரும்மழை பெய்யத்துவங்கியது. மழை விட்டதும் அங்கங்கு ஒதுங்கியிருந்த சிலர் அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது காந்தி சிலை அருகில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மலிவான விற்பனை செய்யும் கடைக்குள் இருந்து கரும்புகை வருவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையின் உள்ளே தீ பற்றி எரிவது உற்று நோக்கியவர்களுக்கு நன்றாக தெரிந்தது. உடனே அவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இருந்த சிறார்களுக்கான சைக்கிள் விற்பனை கடை, விவசாயத்துக்கு, குடிநீர்க்கு தேவையான மோட்டார், பைப் கள் விற்பனை செய்யப்படும் கடைகள், கண் கண்ணாடி கடை என 4 கடைகளில்  அடுத்தடுத்து தீ பற்றி எரியத்துவங்கின. இந்த கடைகளுக்கு பின்னால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த பெரிய குடோன்குள்ளும் தீ பரவி அதுவும் எரியத்துவங்கின. உள்ளிருந்த கண்ணாடி பொருட்கள் வெடித்து சிதறின. கடை பூட்டியிருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் உதவியுடன் கதவை உடைத்து அதன்பின் தீயை அணைத்தனர்.

Goods worth Rs 1 crore were destroyed in a fire at a shop in Tiruvannamalai

தீயணைப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் மட்டுமே வந்து தீயை அணைக்க துவங்கின. கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வந்தால் தீயை அணைத்திருக்கலாமே என காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, மற்ற வாகனங்கள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது, அதனை கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்றனர் தீயணைப்பு அதிகாரிகள். இதனால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீரை கொண்டுவந்து தீயணைப்பு வாகனங்களில் நிரப்பியபடி இருந்தன. சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விடியற்காலை 3 மணி அளவில் தீ அணைக்கும் பணி முழுமையாக முடிவடைந்தது. மழை பெய்ததால் தீ விபத்தை இன்னும் பெரியளவில் பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த விபத்து மூலமாக தோராயமாக சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். தீ விபத்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்குள் எப்படி விபத்து ஏற்பட்டது?, இது விபத்தா? சதியா? என திருவண்ணாமலை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்