
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று (12/06/2025) மதியம் 1:45 மணியளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற விமானமானது திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் புறப்பட்ட பத்தாவது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த இடத்திற்கு 90 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அகமதாபாத் விரைந்துள்ளார். விபத்தில் சிக்கியது ஏர் இந்தியாவின் 787-7வது போயிங் விமானம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் அவர்களின் நிலை என்னவானது என தெரியாமல் தவித்து வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தை கேப்டன் ஸ்மித் சபர்வால், கிளைகுந்தர் இயக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விபத்து நிகழ்ந்த பகுதி விமான நிலையத்தின் அருகிலேயே உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் அந்த பகுதி மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். நிலத்திலிருந்து 625 அடி உயரத்தில் பறந்த பொழுது திடீரென ஏற்பட்ட இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.