Skip to main content

பணத்திற்காக கொலை செய்த பாலியல் பெண் தொழிலாளி கைது...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

krishnagiri woman arrested


கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிச்சாமி வயது 30. இவர் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 28ஆம் தேதி தியாகதுருகம் அருகிலுள்ள பிரிதிவிமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் பழனிச்சாமி இறந்து கிடந்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன பழனிச்சாமி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதை கொலை வழக்காக பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்.பி.ஜியாவுல் ஹக், டி.எஸ்.பி. ராம நாதன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் கொண்ட  ஒரு தனிப்படை அமைத்தனர்.


இந்த  தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அதில் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இறந்து போன பழனிச்சாமி சம்பவத்தன்று பிரியாணி பொட்டலம் வாங்கி சென்றதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அப்போது அவருடன் ஒரு பெண்ணும் சென்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், அந்த கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தினர். பழனிச்சாமி உடன் சென்ற அந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர். 


அதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி 37 வயது கோமதி என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கோமதியை தேடி பிடித்து விசாரணை செய்ததில் அவருக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கோமதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இறந்துபோன பழனிச்சாமிக்கும் எனக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வந்தோம் அப்போது பழனிச்சாமி மது போதையில் இருந்தார். தியாகதுருகம் பகுதியில் இருந்த ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு பிரிதிவிமங்கலம் ஏரிப் பகுதிக்கு சென்றோம். அங்கு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இருவரும் தனிமையில் இருந்தோம். பின்னர் பழனிச்சாமி குடிபோதையில் என்னை எட்டி உதைத்தார். இதனால் எங்களுக்குள் சண்டை வந்தது. இதில் ஆத்திரமடைந்த நான் பழனிச்சாமியின் கழுத்தை துணியால் இறுக்கினேன். அவர் இறந்து போனதை தெரிந்து கொண்டு அவரிடமிருந்த 3500 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டேன். இவ்வாறு கோமதி வாக்குமூலம் அளித்துள்ளார். 


கோமதி பழனிச்சாமியுடன் பழக்கம் ஏற்படுத்தியது போன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இதேபோன்று பல்வேறு ஆண்களுடன் பணத்திற்காக தொடர்பில் இருப்பது தனியாக இருக்கும் ஆண்களை அழைப்பதும் அப்படி தனிமையில் இருக்கும்போது அவர்களை தாக்கி பணம் நகை செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துச் செல்வதும் என செயல்பட்டுள்ளார். இவர் மீது இதுபோன்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பழனிச்சாமியை கழுத்தை  நெறித்து கொலை செய்த வழக்கில் கோமதி தியாகதுருகம்  போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோமதியை மருத்துவ பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ போலீசார் சேர்த்துள்ளனர் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MP sworn in Telugu

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர். 

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Hosur Corporation Chinna Elsakhiri Ambedkar Nagar water incident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏலசகிரி பகுதியில் அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் அப்பகுதி மக்கள் அருந்தியுள்ளனர். இந்தக் குடிநீரை அருந்தியவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள சாந்தபுரம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து குழாய் ஆய்வாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கபட்டுள்ள உத்தரவில், பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 80 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.