
கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சலூன்கள், ஸ்பா போன்றவை திறக்க அனுமதிக்கப்படாமல் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மற்றும் சலூன்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சலூன்கள் திறக்கப்பட்டு இருந்த சூழலில் மசாஜ் சென்டர் திறக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகரில் செயல்பட்டு வந்த ஸ்பாக்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள எஸ்.ஆர். காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் மூன் லைட் என்ற ஸ்பாவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பாவை நடத்தி வந்த சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் என்ற விஜய் (32) என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பெண் மற்றும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் ஆகிய இருவரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல பீளமேடு மசககாளிபாளையம் சாலையில் உள்ள எஸ்பிஎஸ் கிராண்ட் ஹோட்டலில் நான்காவது தளத்தில் செயல்பட்டுவரும் மசாஜ் சென்டரில் பீளமேடு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள், செந்தில் குமார் என்பவரின் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த புளியகுளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி ஆகிய இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.