Skip to main content

தொகுதியை அறிவோம்... திருவண்ணாமலை!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் ( தனி ), திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என 6 தொகுதிகள் உள்ளது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், திருப்பத்தூர் என 4 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்களும், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

 

election

 

சட்டமன்றத்தில் மட்டும்மல்ல இந்த பாராளுமன்ற தொகுதி திமுக வரலாற்றில் மிக முக்கியமான தொகுதி. திமுக என்கிற கட்சி தொடங்கப்பட்டு திமுக எதிர்கொண்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு எம்.பிக்கள் திமுக சார்பில் வெற்றி பெற்றனர். அதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தர்மலிங்கமும் ஒருவர். அன்று முதல் தற்போதைய தேர்தல் வரை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.

 

 

1971 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி என்பது திருப்பத்தூர் தொகுதியாக பெயர் மாற்றம்மடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் திமுக சின்னராஜ், 1977ல் திமுக சி.என்.விஸ்வநாதன், 1980ல் திமுக முருகையன், 1984, 1989, 1991ல் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாறி மாறி கூட்டணி வைத்து காங்கிரஸ் ஜெயமோகன் வெற்றி பெற்றார். 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ச்சியாக 5 முறை திமுகவை சேர்ந்த வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014ல் அதிமுக வனரோஜா வெற்றி பெற்றார். திமுக தொடங்கியது முதல் இப்போது வரை திமுகவின் தொகுதிகளில் வெற்றி தொகுதி என்பது கட்சி தலைமையின் நம்பிக்கை.

 

 

இந்த தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக வன்னியர், தலித், கவுண்டர்கள், அதற்கடுத்தயிடத்தில் முதலியார், கிருஸ்த்துவர்கள், இஸ்லாமியர்கள் என்கிற வரிசையில் உள்ளனர்.

 

இந்த தொகுதியில் 2014ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 13,31,724 வாக்குகள். இந்த 2019 தேர்தலில் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி, 14,54,657 வாக்குகள் உள்ளன. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டும்மே. நிலத்தடி நீரை மட்டும்மே விவசாயம் நடக்கும் பகுதியிது. ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாய நிலங்களுக்கு மட்டும் சாத்தனூர் அணை நீர் பாசனத்துக்கு கிடைக்கும். விவசாயம் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள், பெங்களுரூ, மாண்டியா, ஷிவமோகா, சென்னை போன்ற இடங்களுக்கு விவசாய வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும் செல்கின்றனர். இதனால் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் இந்த தொகுதியுள்ளது.

 

 

பிரபலமான அண்ணாமலையார் கோயில் இந்த தொகுதிக்குள் தான் வருகிறது. மாதத்துக்கு 20 லட்சம் பக்தர்களை திருவண்ணாமலை நகரம் காண்கிறது. இதன் மூலம் ஓரளவு சுற்றுலா வளர்ச்சி அடைந்து தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றப்படி இந்த தொகுதியில் விவசாயமே பிரதானம்.

 

தொகுதியின் தேவைகள்……..

 

1.   வேலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது திருப்பத்தூர், ஜோலர்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஏலகிரி பகுதி மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்குறுதி தருகிறார்கள், வெற்றி பெற்றவுடன் மறந்துவிடுகிறார்கள்.

 

2.   திண்டிவனத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை வழியாக ஜோலார்பேட்டைக்கு இரயில்பாதை அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. அந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணிகள் தொடங்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தும், பணிகள் தொடங்கவில்லை.

 

3.   திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்ற பணிகள் நடைபெற்று அவை பாதியில் நிற்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள், கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய – மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.

 

4.   திருப்பத்தூர் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

 

5.   செங்கம் பகுதியில் அரசின் சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளில் முக்கியமானவையாகும்.

 

6.   சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும், மத்திய அரசின் நிதியுதவியோடு பெரிய தளமாக மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும்.

 

7.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை பிரதான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

8. எட்டுவழி சாலையை புறக்கணிக்க வேண்டும்.

தற்போது இந்த தொகுதியில் திமுக சார்பில் அண்ணாதுரை என்பவரும், அதிமுகவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் களத்தில் நிற்கிறார்கள். இவர்களில் மேற்கண்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி தருகிறேன் என்பவருக்கு இந்த தொகுதி சாதகமாக இருக்கும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.