Skip to main content

சிறுவன் கடத்தல் சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Kidnapping incident; Ex-wife of IAS

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் தற்போது குஜராத்துக்கு விரைந்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சார்ந்த செய்திகள்