Skip to main content

ஜெயலலிதா இல்லம் அரசுடைமை: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு... எடப்பாடி பழனிசாமி தகவல்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Jayalalithaa House Ownership: Appeal Against High Court Order; Edappadi Palanisamy Info!



போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகிறது. அதன்படி, சேலத்தில் உள்ள மாநகர் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. 

 

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு திங்கள்கிழமை (29.11.2021) நேரில் வந்தார். அவர் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார். 

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தற்போது பெய்துவரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 

 

மத்தியக்குழு ஆய்வுசெய்து சென்ற பிறகு, கடந்த மூன்று நாட்களாக மழை பெய்துவருகிறது. எனவே இரண்டாவது முறையாகவும் சேதங்களை மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். 

 

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருப்பதால் சேதம் ஏற்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் சேதமாகும் நெல் மூட்டைகளைப் பராமரிக்க வேண்டும். 

 

நகர்ப்புறங்களில் மழையால் பல பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீரை உடனடியாக மின் மோட்டார் மூலம் அகற்ற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். 

 

சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு இடிந்த வீடுகளை அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். தற்காலிகமாக அவர்கள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 15 லட்சம் ரூபாயும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும்.

 

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அதிமுக தொண்டர்களின் கோயிலாகும். அதைப் பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் அரசுடைமை ஆக்கினோம். தற்போது நீதிமன்றம் அரசுடைமை செய்த உத்தரவை ரத்து செய்துள்ளது. 

 

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசிய பிறகு மேல்முறையீடு செய்வோம். டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.