Skip to main content

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Increase in water release in Mettur Dam

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையிலிருந்து 15,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,688 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திறந்து விடப்பட்ட நீரானது நேற்று ஒகேனக்கல் வந்தடைந்தது. தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை 2,000 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில்  5,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கன அடியாக உள்ளது. காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்துள்ளதால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பின் அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்