வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பாலாற்று பகுதியில் வடகரை பகுதியை சேர்ந்த கலைவாணியும், அவரது 6 ஆம் வகுப்பு படிக்கும் மகன் மோகன்ராஜ் இருவரும் தங்களுக்கு சொந்தமான இரண்டு மாடுகள் மற்றும் 3 ஆடுகளை ஆற்றில் தண்ணீர் குடிக்க வைத்தவர்கள், அவைகளில் தண்ணீரில் குளிப்பாட்டியுள்ளனர். திடீரென மாணவன் மோகன்ராஜ் கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சியான அவரது தாய் கலைவாணி கூச்சலிட்டு கதறி அழுது கத்தியுள்ளார்.

இதனை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து ஆற்று நீரில் மூழ்கிய மாணவன் மோகன்ராஜ்ஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடத்துக்கு மேலான தேடலில் நீருக்குள் மூழ்கியிருந்த மோகன்ராஜ்ஜை மீட்டு உடனடியாக மேல் சான்றோர் குப்பம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று காண்பித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் மோகன்ராஜ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுப்பற்றிய தகவல் அறிந்த உமராபாத் போலீசார், மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வடகரை பகுதியில் பாலாற்றில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. சுமார் 10 அடியில் இருந்து 30 அடி ஆழம் வரை மணல் அள்ளியதில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பகுதி பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆற்றில் விழுந்தவ சிறுவனை பள்ளங்கள் உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.