Skip to main content

“என்னை கைது செய்தால்... திமுக போல் பாஜகவும் ஆட்சியில் இருக்கிறது” - அண்ணாமலை

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

"If I am arrested .. BJP is in power like DMK" - Annamalai

 

“பி.ஜி.ஆர். நிறுவன டெண்டர் முறைகேடு குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையம் நடத்த வேண்டும். செந்தில்பாலாஜியின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன் என்னை கைது செய்தாலும் பராவாயில்லை. திமுக ஆட்சி போல, பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். 

 

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஊழல் எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை செந்தில் பாலாஜியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஊழலின் தளபதியாக செயல்படுகிறார். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என ஸ்டாலினே கூறியுள்ளார். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் தகுதி தெரியாமல் டெண்டர் வழங்கியிருப்பதால் திமுக அரசு கார்ப்பரேட் அரசாக செயல்படுகிறது. கோபாலபுரம் குடும்பத்தினர் அனைத்து துறைகளிலும் தலையிட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மின்வெட்டு தொடங்கும். அதற்கான அச்சாரமாகத்தான் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளனர்.


செந்தில் பாலாஜி, பி.ஜி.ஆர். நிறுவனத்தின் ஊழியராகப் பேசுவதைவிட தமிழகத்தின் அமைச்சராகப் பேச வேண்டும். டான்ஜெட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் அனுமதி வழங்கியது ஏன்? 4,472 கோடி ரூபாய்க்கு விதாண்டவாதமாக பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியுள்ளனர். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் டெண்டர் முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். 

 

பி.ஜி.ஆர். நிறுவனம் 15ஆண்டு காலமாக அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியுள்ளது குறித்து நிறுவனம் தொடங்கிய நாள் முதல் விசாரணை நடத்த வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் தனது பதவியை முதலில் காப்பாற்றிக்கொள்ளட்டும். செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க தயார். 

 

சிறையில் இருந்து வந்து மீண்டும் திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டுவருவேன். திமுக மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் பண அரசியல் செய்யலாம் என திமுக நினைக்கிறது. தமிழகத்தின் பிரச்சனையைப் பற்றி பாஜக மட்டும்தான் பேசுகிறது. பி.ஜி.ஆர். ஒப்பந்தம் குறித்தும் முதல்வர் மற்றும் செபிக்கு கடிதம் எழுதவுள்ளோம். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தினால் திமுக அரசை வெளிப்படையான அரசு என ஒத்துக்கொள்கிறேன். எந்தக் கட்சி ஊழல் செய்தாலும் அதனை வெளிக்கொண்டுவருவோம். கார்ப்பரேட் தான் ஊழலின் ஊற்றுக்கண். 

 

எம்.பி.தொகுதிகளின் வெற்றிகளை கார்ப்பரேட் நிறுவனம்தான் முடிவு செய்யும் நிலை உள்ளது. தமிழகத்தில் 20 சதவிதம் கப்பம் கட்டித்தான் நிறுவனம் அனுமதிபெறும் நிலை உள்ளது. ஊழல் செய்யும் எந்த நபர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு ஊழல் நடைபெறுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. 

 

‘நமோ’ மொபைல் ஆப் என்பது மைக்ரோ டொனேசன் மூலமாக பாஜகவிற்கு நிதி செலுத்தலாம். ஸ்வட்ச் பாரத், தடுப்பூசி போன்ற சமூகப் பணிகளை மேற்கொள்கிறோம். நமோ ஆப்பிற்கும் மத்திய அரசிற்கும் சம்மந்தமே இல்லை. நமோ ஆப் மூலமாக பாஜகவினர் சேவை செய்த பின்னர் ஸ்டிக்கர் ஒட்டுகிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.