Skip to main content

மனைவி நடத்தை குறித்து சந்தேகம்; கணவரின் வெறிச்செயல்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Husband's Doubts about wife's behavior in tuticorin

 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள ஆறாம் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மீனா (28) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களது குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில வருடங்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், குழந்தைகள் வழக்கம் போல் நேற்று (31-10-23) பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட மீனா, வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனாலும், அவரை விடாமல் விரட்டி வந்த ராஜ்குமார், மீனாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர், ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மீனாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, முறப்பநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜ்குமாரை தேடி வந்தனர். அதன் பிறகு, ராஜ்குமார் தாமாக முன்வந்து முறப்பநாடு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 

 

அந்த விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ராஜ்குமாருக்கும் மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மீனா, கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மீனாவை சமாதானம் செய்து ராஜ்குமார் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மீண்டும் நடத்தை மீதான சந்தேகம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மீனாவை வெட்டியுள்ளார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்