Skip to main content

குஜராத் பெண் கடத்தப்பட்ட விவகாரம்; அனைத்தையும் சொன்ன கிருத்திகா - வாக்குமூலத்தால் பரபரப்பு

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Gujarat woman abduction case; Kritika said everything; Excited by the confession

 

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கிருத்திகா காவல்நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டாகுளம் ஏரியாவைச் சேர்ந்த மாரியப்பன் சவுதியில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தவர். இவரது இளைய மகன் வினித். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியிலிருந்து வந்த நவீன் பட்டேல் - தர்மிஸ்தா பட்டேல் தம்பதி இதே பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகிறார்கள். அவர்களின் மூத்த மகள்தான் கிருத்திகா. பள்ளிப்படிப்பை முடித்த வினித் மேற்படிப்பிற்குப் பின் சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணியிலிருந்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்த கிருத்திகா டிப்ளமோ படிப்பிற்காக சென்னை வந்தபோது வினித் - கிருத்திகாவின் காதல் வளர்ந்திருக்கிறது.

 

இந்நிலையில், கிருத்திகாவும் வினித்தும் கடந்த மாதம் 20 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருத்திகாவை வீடு புகுந்து கடத்திச் சென்றனர். பட்டேல் குரூப் கிருத்திகாவைக் கடத்திய வீடியோ வைரலாகவே டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரை போய் சம்பவம் சீரியசாகியிருக்கிறது. தென்காசி மாவட்டக் காவல்துறையின் மீதான தனது கடும் அதிருப்தியை டி.ஜி.பி. வெளிப்படுத்திய பிறகே நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. எல்லாம் நடந்து முடிந்தபிறகே கிருத்திகாவின் தந்தை நவீன், தாய் தர்மிஸ்தா, டிரைவர் ராசு, உறவினர்களான விஷால், கிருத்தி, ராஜேஸ், மைத்ரிக் உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. 

 

இந்நிலையில், கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட வினித், தன் மனைவி கிருத்திகாவை மீட்பதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். அதேசமயம் கிருத்திகாவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. 

 

Gujarat woman abduction case; Kritika said everything; Excited by the confession

 

ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வினீத்துக்கும் கிருத்திகாவுக்கும் திருமணம் ஆனதற்கான ஆவணங்களை நீதிபதிகள் கோரினர். அதனை சரிபார்த்த பின், குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்த மைத்ரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பினர். அவர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதமே கிருத்திகா - மைத்ரிக் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறப்பட்டதற்கான ஆதாரங்களைக் கோரினர். அப்படி எதனையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.

 

குஜராத்துக்கு கடத்தப்பட்ட கிருத்திகாவிடமும் நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். பெற்றோருடன் விரும்பியே சென்றதாக கிருத்திகா தெரிவித்த நிலையில், அக்டோபரில் மைத்ரிக்குடன் திருமணம் செய்த நிலையில் இங்கே ஏன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என்ற நீதிபதியின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார் கிருத்திகா.

 

பின் நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெறவேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இருதரப்பும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

காவல்துறையினர் விசாரணையில் கிருத்திகா கொடுத்த வாக்குமூலத்தில், வினித்தை 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும் வீட்டை விட்டு வெளியேறி வினித்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்தபின் அவருடன் கோவா சென்று 3 நாட்கள் தங்கி இருந்ததாகவும் கிருத்திகா கூறியுள்ளார். தன்னை யாரும் கடத்தவில்லை. விருப்பப்படியே வினித் உடன் சென்றேன். வினித்தை காதலித்ததால் எனது பெற்றோர் குஜராத் அழைத்து சென்று மைத்ரிக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். பின் மீண்டும் வந்த பிறகு வினித் உடன் நட்பை தொடர்ந்ததாகக் கூறியுள்ளார்.

 

Gujarat woman abduction case; Kritika said everything; Excited by the confession

 

பின் வழக்கறிஞர் உதவியுடன் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி வினித்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கிருத்திகா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். நான் காணாமல் போனதாக தாய் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் காவல்நிலையத்தில் வினித்துடன் வந்து ஆஜர் ஆனேன். ஏற்கனவே எனக்கு நடந்த திருமணத்தை காவல் நிலையத்தில் கூறாமல் பெற்றோர் மறைத்துவிட்டனர். 

 

வினித்தின் குடும்ப கலாச்சாரம் பிடிக்காததால் அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி மைத்ரிக் பட்டேலிடம் கூறினேன். வினித்தின் தந்தை மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் வினித்தை பிரிந்துவிட முடிவு செய்தேன். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் விருப்பப்படியே சென்றதாகவும் கூறியுள்ளார். நான் கேட்டுக் கொண்டதால் குற்றாலம் காவல் நிலையத்துக்கு சென்று வந்த போது என்னை எனது பெற்றோர் மற்றும் மைத்ரிக் அழைத்து சென்றனர். பெற்றோருடன் சேர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா சென்று பின் அங்கிருந்து குஜராத் சென்றோம். அகமதாபாத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் மைத்ரிக் உடன் நடந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் கிருத்திகா வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

இந்த வாக்குமூலத்தை ஐகோர்ட் மதுரை கிளையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில், கிருத்திகாவை யாருடன் அனுப்புவது என்பது குறித்து நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.