Skip to main content

மூதாட்டிகளைக் குறிவைத்து நகை திருடும் கும்பல்...!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

The gang that constantly steals jewelry  in a strange way ...!


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ளது திருச்சிற்றம்பலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது விஜயராணி. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். விஜயராணி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர் வீட்டருகே தங்கள் பைக்கை நிறுத்திவிட்டு விஜய் ராணியின் அருகில் சென்றனர். அப்போது, அந்த மர்ம நபர்கள் விஜயராணியிடம் தாங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் மூலம் தங்களுக்கு பரிசுப்பொருட்கள் குலுக்கல் முறையில் விழுந்துள்ளது, எனவே அதனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு வருமாறு கம்பெனி நிர்வாகம் கூறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

 

அவர்கள் உத்தரவின்பேரில் அந்த பரிசுப் பொருளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அதை ஒப்படைத்தற்கு அடையாளமாக உங்களை புகைப்படம் எடுத்துச் சென்று கம்பெனி முதலாளியிடம் காட்ட வேண்டும் என்று அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்ட மூதாட்டி விஜயராணி சந்தோஷத்தில் ஃபோட்டோ எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஃசெல்போன் மூலம் போட்டோ எடுக்க போகும்போது நீங்கள் கழுத்தில் தங்க நகைகள் போட்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கக் கூடாது  எனவே அதைக் கழட்டி வைக்குமாறு கூறியுள்ளனர். 


உடனே தன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையைக் கழட்டி வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். விஜயராணியை அந்த மர்ம நபர்கள் ஃபோட்டோ எடுத்து முடித்தவுடன் அவரிடம் உங்கள் கணவருடைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ வேண்டும், அதனை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அவர் அந்த ஃபோட்டோ எடுப்பதற்காக வீட்டுக்குள் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் கழட்டி வைத்த 8 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

 

Ad

 

மர்ம நபர்கள் நகையை எடுத்துச் செல்வதைப் பார்த்து பதறிப்போன விஜயராணி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபர்கள் அதற்குள் தங்கள் வந்த பைக்கில் ஏறி பறந்துவிட்டனர். நகையைப் பறிகொடுத்த விஜயராணி, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நகையை எடுத்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்று மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் மூன்றுக்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்