![Flying Force Test at vck Administrator's House](http://image.nakkheeran.in/cdn/farfuture/H-LgDe24TtJJY7kxeGdcnF2EFLlwF6AYdkAX_GweRdM/1712058754/sites/default/files/inline-images/a5864.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோரின் கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சேலத்தைச் சேர்ந்த அமமுகவின் மாவட்டச் செயலாளர் காரில் இருந்து ஆவணம் இல்லாத 16.85 லட்சம் ரூபாய் இன்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே விசிக கட்சி நிர்வாகி பெருமாள் என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில்2.5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் புவனேஸ்வரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.