Skip to main content

“எம் புள்ளய எப்புடியாச்சும் காப்பாத்தி குடுங்கையா..” - மருத்துவரிடம் கதறும் தாய்..

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Fiver year old kid seeking medical emergency

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராஜ். இவரது மனைவி பிரேமா. இவர்கள் இருவரும் அன்றாடம் கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். கட்டட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற விளிம்பு நிலைக் குடும்பம். இவர்களுக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

5 வயது சிறுமியான இசக்கியம்மாள் பக்கத்து வீடு மற்றும் அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுமி இசக்கியம்மாள் பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சமயம், அங்குள்ள வாசிங் மெஷின் மீது அதனை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரை திண்பண்டம் என்று நினைத்துச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மறுநிமிடம் சிறுமியால் உணவு தண்ணீர் சாப்பிட முடியாமல் வயிறு வலி மற்றும் எரிச்சலால் துடித்திருக்கிறார். வேலையிலிருந்து வீடு திரும்பிய அவளின் பெற்றோர்கள் அவள் படும் வேதனையைக் கண்டு பதறியபடி சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை செய்த மருத்துவர்கள், பின்னர் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் ஓரளவு சிறுமி குணமடைந்ததாகத் தெரிவித்து கடந்த மாதம் அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

 

Fiver year old kid seeking medical emergency
                                                         சிறுமி   இசக்கியம்மாள்


ஆனால் சிறுமியால் கடந்த ஒரு மாதமாக உணவு எதும் சாப்பிட முடியாமல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய், உடல் மெலிந்திருக்கிறது. அதையடுத்து தற்போது அவளை சிகிச்சைக்காக பெற்றோர்கள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே தலைமை மருத்துவரான ராஜேஷ் கண்ணா தலைமையில் டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சையளித்துவருகின்றனர். சிறுமியின் சிகிச்சையில் மிகவும் அக்கறை எடுத்து கவனித்துவருகிறார் தலைமை மருத்துவரான ராஜேஷ் கண்ணா. மேலும், அவர் இதுபற்றி கூறுவது, “சிறுமி இசக்கியம்மாள் தின்ற பொருளின் தாக்கம் இருக்கிறது. அது உடலில் தங்கியிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆனாலும் நாங்கள் தற்போது சிறுமியைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளித்துவருகிறோம். இரண்டு நாட்கள் கழித்து சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அதற்கான செலவு அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்வேன்” என்றார் கருணையோடு.

 

Fiver year old kid seeking medical emergency

 

தன் மகள் எதுவும் சாப்பிட முடியாமல் உடல் மெலிந்து வாடியிருக்கும் நிலையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் அவளது அம்மா பிரேமாவோ, “நா வேலைக்குப் போயிட்டேன். வந்து பாத்ததும் புள்ள துடிச்சுட்டு இருந்தா. ஆசிட் பொடி, கிளினிங் பொடி அப்புடின்னு சொன்னாங்க. அவ என்ன பொடியச் சாப்புட்டான்னு தெரியல. பக்கத்து வீட்டுலதான் சொன்னாங்க. ஒடனே தென்காசி மருத்துவமனைக்குக் கொண்டு போனேன். அங்க 15 நாள் சிகிச்சையில இருந்தா. வீட்டுக்கு வந்தும் புள்ள ஆகாரம் எதுவும் சாப்புடல. அதுக்கப்புறம் ஹைகிரவுண்டுக்கு அனுப்பிட்டாங்க. அங்க குடல விரிச்சுவிட்டு சிகிச்சை பண்ணாங்க. அப்புறம் 15 நாள் கழிச்சு கொடல விரிச்சுவிட்டாங்க இப்புடி 3 தடவ செய்யணும்னு சொன்னாங்க. ஆனா இன்னிய வரைக்கும் புள்ள ஆகாரம் எதுவும் சாப்புடல. உடல் மெலிஞ்சு போயிட்டா. 4 மாசமா என் புள்ளயோட நெலமைய பாத்து என்னால வேல செய்ய முடியல. குடும்ப பாடு சிக்கலா இருக்கு. எம் புள்ளய எப்புடியாச்சும் காப்பாத்திக் குடுங்கையா” என்றார் கண்ணீர் மல்க.

 

உடல் மெலிந்து உயிருக்குப் போராடும் சிறுமி மீது அரசு கருணையோடு தனி கவனம் செலுத்துமேயானால் அந்தப் பிஞ்சுக்கு மறுவாழ்வு கிடைக்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

Published on 01/03/2024 | Edited on 02/03/2024
An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.