Skip to main content

பிரியாணியால் ஏற்பட்ட சண்டை ... முதிய தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 A fight over biryani... a tragedy for an old couple

 

பிரியாணிக்காக சண்டை போட்டு முதிய தம்பதிகள் தீ வைத்துக் கொண்ட சம்பவம் சென்னை அயனாவரத்தில் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வந்தவர் கருணாகரன்(75). இவரின் மனைவி பத்மாவதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் திருமணத்திற்குப் பின்  மூன்று மகன்களும் தனித்தனியாக வசித்து வந்தனர். முதிய தம்பதிகள் சற்று மனநலம் பாதித்தது போல் அவ்வப்போது நடந்து கொள்வதாகவும், வீட்டில் தங்க வைத்தாலும் மகன்களுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

 

அதேபோல் கருணாகரன் மனைவி பத்மாவதிக்கு சரியாக உணவு வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கருணாகரன் கடையில் பிரியாணி வாங்கி வந்து தனியாகச் சாப்பிட்டுள்ளார். அப்பொழுது மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது. அப்பொழுது ஆத்திரமடைந்த கருணாகரன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பதறிய பத்மாவதி தீயுடன் ஓடி வந்து கணவர் கருணாகரனைக் கட்டிப் பிடித்துள்ளார்.

 

இதன் காரணமாக கருணாகரன் மீதும்  தீ பரவியது. இருவரும் தீயில் காயமடைந்த நிலையில் அலறியுள்ளனர். அவர்களின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருணாகரனும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்